King of soul forever
என்னவனின் தீண்டலில் உருவான பொக்கிஷமே எப்பொழுது நீ எட்டிப்பார்ப்பாயென காத்திருக்கிறான் எனக்கானவன்.... நீ அறிவாயோ சிசுவே தாழியில் தொடங்கி தாம்பத்யத்தில் கலந்து தாங்கிக்கொள்ள ஆரம்பித்தவன் தாங்கிக்கொண்டே இருக்கிறான்.. நான் உன்னை தாங்கும் இந்த கணம் வரை.. ஒன்பதரை மாதங்களில் உன் ஒவ்வொரு அசைவிற்க்கும் அவனே ஆர்ப்பரிக்கின்றான் அதை அசையாமல் நான் இரசித்த நிமிடங்கள் நீ அறிவாயோ.. என் மிகப்பெரிய வரம் அவன்.. கண்ணீரின் சூட்டையெல்லாம் கணவன் வீட்டில் கரைத்து குளிர்ந்து விட்ட கண்களை பெற்ற மனைவியருள் நானும் ஒருவளாய்.. சம்பிரதாயங்களெல்லாம் சரியாகவே நடந்தன வளைகாப்பெல்லாம் அப்பப்பா விதவிதமான சாப்பாட்டாலும் ஆப்பிள், மாதுளையென உறவினர்களோடும் வீடே கோலாகலத்தில்.. எல்லா பெண்களின் வேண்டுதல்களையெல்லாம் எனக்கே அளித்துவிட்டான் போலும்.. எவ்வித எதிர்பார்ப்பும் எனக்கில்லை.. ஒன்றை தவிர ஆம், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் எந்தன் வயிற்றில் வாழும் நீ பெண் சிசுவாக இருந்தால் நான் நினைத்த இந்த கற்பனைகளெல்லாம் உனக்காவது நிஜமாக வேண்டுமென , ஒருவேளை சோற்றுக்கும் அல்லல்பட்டு இன்றோ நாளையோ வெளிவர இருக்கும் சிசுவோடு தன் நிலையையும் இணைத்து பேணுநர் இல்லா பேதை ஒருவள் எங்கோயோ கேட்பாரற்று புலம்பிக்கொண்டிருக்கிறாள் எந்தன் பேனா முனையும் பொழிந்தே வருந்துகிறது....